வாழ்த்துச் செய்தி - ஞான பாஸ்கரோதய சங்கம் நிர்வாகத்தினர் 2013

வாழ்த்துச் செய்தி


மனிதனை மனிதநேயத்துடன் வாழ வழியமைப்பது ஆலய வழிபாடாகும். ஆலயம் மனிதனுடைய பூரணமான ஆன்மீக வளர்ச்சிக்கு நிறைவான பணியைச் செய்கிறது. இதனால்தான் ஔவையாரும் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று அழகுத்தமிழில் உரைத்துள்ளார். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைசக்தியை உருவத்திருமேனியில் எழுந்தருளச் செய்து அடியார்களுக்கு அருள்பாலிக்க வேண்டுவதே மஹா கும்பாபிஷேகம் எனலாம்.

கல்வியங்காட்டிலே எழுந்தருளியிருந்து அருளாட்சி புரியும் பத்திரகாளி சமேத வீரபத்திர சுவாமியின் இராஜகோபுரத் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து மஹா கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் கை கூடியிருப்பதும் எம் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது.

பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தில் வேண்டுவோர் வேண்டுவதை ஈய்ந்து மக்களைக் காத்தருளி வருபவராக பத்திரகாளி சமேதராக வீரபத்திரர் எழுந்தருளி அருளாட்சி புரிகின்றார். இங்கு நடைபெறும் கும்பாபிஷேகம் ஊருக்கும் மக்களுக்கும் சிறப்பைத்தருவதாகும்.

இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று உழைத்த அறங்காவலர் சபை உறுப்பினர்களையும் ஊரிலுள்ளவர்களையும் வெளியூரிலிருந்து அறக்கொடை அளித்தவர்களையும் மனதாரப் பாராட்டுகின்றோம்.

இக் கும்பாபிஷேக நிறைவினை முன்னிட்டு ஆலய தர்ம பரிபாலன சபையினால் வெளியிடப்படும் "கும்பாபிஷேக மலருக்கு" வாழ்த்துச் செய்தி வழங்குவதுடன் தொடர்ந்தும் ஆலய நிர்வாகம் ஆலயத்தின் பெருவளர்ச்சிக்கு அரும்பணியாற்ற வீரபத்திர சுவாமி அருள்புரிய வேண்டும் எனவும் வாழ்த்தி அவரின் பாதங்களைப் பணிந்து வாழ்த்துக்கள் பல கூறி நிற்கின்றோம்.


ஞான பாஸ்கரோதய சங்கம் கல்வியங்காடு
நிர்வாகத்தினர்
2013

கருத்துரையிடுக

0 கருத்துகள்