-->

கேதார கௌரிகாப்பு மாலை


கேதார கௌரி விரத காப்பு பாடல் வரிகள்

பிள்ளையார் காப்பு

முன்னின்று செய்யுள்

முறையாய்ப் புனைவதற்கு

என்னின்று அருள் செய் 

எலி வாகனப்பிள்ளாய்

சொற்குற்ற மொடு பொருட் குற்றம் 

சோர்வு தரும், எக்குற்றமும் வராமற் கா.


கௌரி காப்பு

காப்பெடுக்க வந்தேனே 

கௌரி அம்பாள் தாயே

காத்து என்னை தேற்றிடுவாய் 

காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின் அரிய 

காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமங்கள் 

இனிதாக முடித்துவிடு


பண்ணும் வினையாவும் 

பனிபோல போக்கிடுவாய்

உண்ணும் உணவாக 

உயிருக்கு உயிராக

என்றும் இருந்தே 

எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்து வந்தேன் 

மலையும் கடந்து வந்தேன்


காளி மகா தேவியரே 

காப்பெனக்கு தந்திடுவாய்

சூலம் கொண்டவளே 

சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே 

அம்மா காளித்தாயே

கொடிய மகிடாசூரனைக் 

கூறு போட்டவளே


அசுரர் குணம் யாவும் 

அளிக்கும் சுடர்க் கொடியே

சிவனை நினைத்தெல்லோ 

சீர்விரதம் நீ இருந்தாய்

பரனை நினைத்தெல்லோ 

பதி விரதம் நீ இருந்தாய்

அரனை நினைத்தெல்லோ 

அம்மா நீ நோன்பிருந்தாய்


சங்கரனை எண்ணியல்லோ 

சங்கரி நீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே 

அன்று நீ நோன்பிருந்தாய்

விரதத்தை கண்டே 

விழித்தான் சிவனவனும்

அம்மா உனை அழைத்தே 

அருள் மாரி பொழிந்தானே


வகையாற்றுப் படலமிதை 

வழிவழியாய் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு

காப்பைப் புனைந்துவிடு 

காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு 

நுண்ணறிவை ஊட்டிவிடு


வல்லமையைத் தந்துவிடு 

வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே 

காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே 

காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே 

நற்காப்பு அருளுமம்மா


வீடு செழிக்கவென்றே 

விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு 

நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கு 

அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்கு 

பெருங்காப்பு அருளுமம்மா


பூமணியே மாமணியே 

புனிதவதி தாயவளே

நாம் விரும்பும் காப்பை 

நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்கு 

கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்கு 

திருமகளே வாருமம்மா


வீரம் சிறப்பதற்கு 

வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே 

பராசக்தி தாயவளே

ஏட்டுடைத் தேவியரே 

எல்லாம் மிகு வல்லமையே

காப்பெடுக்க வந்தேனம்மா 

கனிவுடனே பாருமம்மா


பால் பழங்கள் வெற்றிலைகள் 

பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா 

நயந்தென்னை காருமம்மா

காளி மகா தேவியரே 

காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே 

வினை யாவும் காப்பவளே


எத்தால் வாழ்ந்திடுவோம் 

எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையைக் 

கணப்பொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் 

ஏற்றுபுகழ் தேவியரே

காப்பெனக்கு போட்டுவிட்டால் 

கல்மனது இளகிவிடும்


ஞானம் பெருகி வரும் 

நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோருக்கு 

தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு 

நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோருக்கு 

நல்லதெல்லாம் பெருகிவரும்



நாள்கள் கோள்களெல்லாம் 

நலமுடனே இணைந்து வரும்

சந்தணச் சாந்தவளே 

சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சுவளே 

குலக் கொழுந்தே கௌரியம்மா

காப்பினைக் கட்டிவிட்டு 

கடமை முடிந்ததென்று


ஏப்பம் மிக விட்டு 

என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் 

நறுங்காப்பு கட்டதனில்

பூவும் நீருமிட்டு 

போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து 

காப்பதனில் விழித்திடுவேன்


ஞானச் செழுஞ்சுடரே 

காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்கு கையிலுண்டு 

கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் 

எரிமலை போல் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் 

தெரியாமல் செய்கையிலே


காப்புக் கையிலிருந்து 

கண் திறந்து காட்டுமடி

சொல்லற்கரிதான 

சோதிமிகு காப்பதனை 

இருபது நாள்வரையில் 

இசைவோடு தவமிருந்து 

பக்தி மனதுடனே 

பரவி அணிவோர்க்கு 


சித்தியெல்லாம் தந்தருள்வாள் 

சீர்பெருகு கௌரியவள்

முக்திக்கு வழியுமுண்டு 

முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தில் உள்ளோர் எல்லாம் 

ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி 

துலங்கி வந்திடவே


அச்சக்தி எல்லாம் 

அருள்வாள் கௌரியவள்

கௌரி காப்பதனை 

காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர 

முன்வினைகள் நீங்கிவர 

ஞானம் ஓங்கிவர 

நல்லறிவு துலங்கிவர


தேவிமகா காளியரே 

தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்து 

கௌரியே காப்பருளும்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்