-->

சகலகலாவல்லி மாலை

சகலகலாவல்லி மாலை

சகலகலாவல்லி மாலை

குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

துதி~

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உனர்விக்கும் என் அம்மை

தூய உருப்பளிங்கு போல் வாழ் 

என் உள்ளத்தின் உள்ளே

இருப்பளிங்கு வாராது இடர்.

(ஆரம்பம், முடிவு)


1~

வெண்டாமரைக்கன்றி நின்பதம் 

தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டாமரைக்குத் தகாதுகலோ 

சகம் ஏழும் அளித்து,

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக்க 

உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே! 

சகலகலாவல்லியே!


2~

நாடும் பொருட்சுவை சொற்சுவை 

தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்து அருள்வாய்! 

பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற்கொடியே! 

கனதனக் குன்றும் ஐம்பாற்

காடும் சுமக்கும் கரும்பே! 

சகலகலாவல்லியே!


3~

அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது 

ஆர்ந்துன் அருட்கடலில்

குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?

உளம்கொண்டு தெள்ளி

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை 

சிந்தக்கண்டு

களிக்கும் கலாபமயிலே! 

சகலகலாவல்லியே!


4~

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த 

கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! 

வடநூல் கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் 

தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! 

சகலகலாவல்லியே!


5~

பஞ்சப்பிதந்தரு செய்ய பொற்பாத 

பங்கேருகமென்

நெஞ்சத்தடத்து அலராததென்னே? 

நெடுந்தாள் கமலத்து

அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் 

அகமும் வெள்ளைக்

கஞ்சத்தவிசொத்திருந்தாய்! 

சகலகலாவல்லியே!


6~

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் 

பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! 

எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் 

வெங்காலும்,அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! 

சகலகலாவல்லியே!


7~

பாட்டும் பொருளும் பொருளால் 

பொருந்தும் பயனும் என்பார்

கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! 

உளம்கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ் தீன்பால் அமுதம் 

தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப்பேடே! 

சகலகலாவல்லியே!


8~

சொல்லிற்பனமும், அவதானமும், 

கவிசொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!

நளினாசனம்சேர்

செல்விக்கரிதென்று ஒருகாலமும் 

சிதையாமை நல்கும்

கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! 

சகலகலாவல்லியே!


9~

சொற்கும் பொருட்கும் உயிராம் 

மெய்ஞானத்தின் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?

நிலந்தோய் புழக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு 

அரசன்ன நாணநடை

கற்கும் பதாம்புயத்தாளே! 

சகலகலாவல்லியே!


10~

மண்கண்ட வெண்குடை கீழாக 

மேற்பட்ட மன்னரும் என்

பண்கண்ட அளவில் பணியச்செய்வாய்! 

படைப்போன் முதலாய்

விண்கண்ட தெய்வம் பல்கோடி 

உண்டேனும்,விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? 

சகலகலாவல்லியே!




கருத்துரையிடுக

0 கருத்துகள்