-->

இன்று வீரபத்திரர் உதித்ததற்கான நாள், தக்கன் யாகம் தொடங்கிய நாள்

இன்று தக்கன் யாக விழா


சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவம் வீரபத்திரர் என்பது சிவ பக்தர்கள் நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றிய வீரமும் கோபமும் நீதியும் கொண்ட வடிவம் தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார்.


இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள் தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 போர்க்களங்களில் 6 களங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தக்கன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாக வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமன்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும்.

வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது.
பிரம்மனின் மகன் தக்கன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் சிவனுக்கு தக்கன் மாமனார் ஆனான். இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதனால் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தக்கன் அகந்தை கொண்டிருந்தான்.

ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான். பல்லாயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் தக்கன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த மகா யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர். விதியினாலோ/ தந்தை பாசத்தினாலோ தெரியவில்லை. தக்கனின் மகளான தாட்சாயினியும், "என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன் அனுமதி தாருங்கள்" என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று வாதம் செய்து விட்டு தக்கன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள். அங்கு வந்த பிறகு தான் ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தக்கனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

கணவர் பேச்சை கேட்காமல் வந்ததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த மகாயாக குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள். தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தக்கனையும், அவன் நடத்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதிலாக தனது பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார். அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, மண்டையோட்டுமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.
தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவனை நிந்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார்.

முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன. தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால் வீரப்பத்திரரை எதிர்த்தார். அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்பவே முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர். தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள்.

இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.
அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

இதுவே தக்கன் யாக விழாவாக கொண்டாடப்படுகிறது. “வீரம்” என்பதற்கு “நீதி மற்றும் வீரம்” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். இலங்கையிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டும் சில கோயில்களில் பிரதான தெய்வமாக வைக்கப்பட்டும் வழிபடப்படுகிறார்.  யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு, கோப்பாய், கோண்டாவில், பொலிகண்டி என பல இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன. இங்கு நடைபெறும் விழாக்களில் இந்த தக்கன் யாக விழாவும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்