வாழ்த்துச் செய்தி
எம் ஊருக்குக் கண்களாகக் கருதப்படும் சைவப் பேரொளியினை மக்களிடையே பாய்ச்சி ஆத்மீக ஒளி பரப்பும் ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் கோயிலும் அறிவுப் பசி நீக்கும் ஞா. பா. சங்க வாசியசாலையுமாகும். "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஒளவைப்பாட்டியின் பொன்மொழிக்கிணங்க எமது ஊரில் இருந்து கடல் கடந்து மேலைத்தேச நாடுகளுக்குச் சென்ற எமது இளைஞர்களது பெற்றோர்கள் அவர்களைப் பிரிந்து முதன் முதலாக அனுப்பி வைக்கும் போதெல்லாம் எம்மூர் குலதெய்வமாகிய ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் கோயிலில் நேர்த்தி வைத்து அனுப்பும் வழக்கம் உண்டு. இவ் ஆலயம் தாமாகவே தோன்றிய பெருமைக்குரியது.
இவ்வாலயம் எமது ஊர் பெரியோர்களின் அளப்பரிய சேவையாலும் புலம்பெயர்ந்து வாழும் எம்மூர் இளைஞர்களது பங்களிப்பாலும் கட்டம் கட்டமாக முன்னேறிக் கும்பாபிஷேகங்களைக் கண்டு தற்பொழுது வளர்ச்சியின் உச்சமாக இராஜ கோபுரத் திருப்பணி நடைபெற்றமையை இட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும் இவ்வாலயம் சிறப்புற்று வளர்ச்சிபெற எம்மூர் மக்களும் புலம்பெயர் எம் கிராமமக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட எம்பெருமான் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
இவ் இராஜகோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம். மேலும் இது தொடர்பாக வெளியிடும் இராஜகோபுர கும்பாபிஷேக சிறப்புமலர் சிறப்பாக அமைய கல்வியங்காடு ஞான பாஸ்கரோதய கலாசார ஒன்றியம் - கனடா தனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
"ஆணவம் என்னும் இருள்போக்கி ஞானம் என்னும் ஒளி
விளங்க எம்பெருமான் அருள்புரிவாராக"
ஞானபாஸ்கரோதய கலாச்சார ஒன்றியம்
கனடா
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.